அத்தியாயம் 22 - சிறையில் சேந்தன் அமுதன்

தஞ்சைக் கோட்டைக்குள் பொற்காசுகள் வார்ப்படம் செய்யும் தங்கசாலை, மற்றொரு சிறிய கோட்டை போல அமைந்திருந்தது. தங்கச்சாலைக்கு வெளிப்புறத்தில் கட்டுக் காவல் தஞ்சைக் கோட்டை வாசலில் உள்ளது போலவே வெகு பலமாயிருந்தது. அன்று மாலை குந்தவை தேவியும் வானதியும் தங்க சாலையைப் பார்வையிடச் சென்றபோது வேலை முடிந்து பொற்கொல்லர்கள் வெளியில் புறப்படும் சமயம். வாசற் காவலர்கள் பொற்கொல்லர்களைப் பரிசோதித்து வெளியில் அனுப்ப ஆயத்தமானார்கள். பொற்கொல்லர்கள் வாசலண்டை வந்து குவிந்திருந்தார்கள். அந்த நேரத்தில் அரண்மனை ரதம் வந்து தங்கசாலையின் வாசலில் நின்றது. குந்தவையும் வானதியும் இறங்கினார்கள். அவர்களைப் பார்த்ததும் காவலர்களும் பொற்கொல்லர்களும் மெய்ம்மறந்து நின்று “வாழ்க இளைய பிராட்டி” என்று கோஷித்தார்கள். தங்கசாலையின் தலைவர் ஓடி வந்து அரசகுமாரிகளை ஆர்வத்துடன் வரவேற்றார். உள்ளே அழைத்துச் சென்று பொன்னைக் காய்ச்சும் அக்கினி குண்டம், நாணயவார்ப்படம் செய்யும் அச்சுக்கள், அச்சிட்ட நாணயங்கள் முதலியவற்றைக் காட்டினார். ‘அன்றைய தினம் வார்ப்படமான தங்க நாணயங்கள் ஒரு பக்கத்தில் கும்பலாகக் கிடந்தன. அந்தப் பசும்பொன் நாணயங்களின் ஒளி கண்களைப் பறித்தது. ஒவ்வொரு நாணயத்திலும் ஒரு பக்கத்தில் புலியின் முத்திரையும் மற்றொரு பக்கம் கப்பல் முத்திரையும் பதித்திருந்தன.

“பார்த்தாயா, வானதி! எத்தனையோ காலமாக இந்தச் சோழ நாட்டுக்கு உலகமெங்குமிருந்து தங்கம் வந்து கொண்டிருந்தது. தரை வழியாகவும் வந்தது; கப்பல் வழியாகவும் வந்தது. இதுவரை அவ்வளவு தங்கத்தையும் சுமக்கும் பொறுப்புச் சோழ நாட்டுப் பெண்குலத்துக்கே இருந்து வந்தது. ஆபரணங்களாகச் செய்து போட்டுக் கொண்டு தூக்கமுடியாமல் தூக்கி வந்தார்கள். கொஞ்ச காலமாகச் சோழ நாட்டுப் பெண்களுக்கு அந்தப் பாரம் குறைந்து வருகிறது. நம் தனாதிகாரி பழுவேட்டரையர் இம்மாதிரி கண்ணைப் பறிக்கும் தங்க நாணயங்களை வார்ப்படம் செய்ய ஏற்பாடு பண்ணிவிட்டார்!” என்று குந்தவை சொன்னாள்.

“அக்கா! இதனால் என்ன சௌகரியம்?” என்று வானதி கேட்டாள்.

“என்ன சௌகரியமா? நீ ஒன்றுமே தெரியாத பெண்ணடி! இம்மாதிரி பொன்னை நாணயங்களாகச் செய்துவிட்டால், ‘இவ்வளவு பொன்’ என்று நிறுத்துப் பாராமலே மதிப்பிடச் சௌகரியம். குடிகள் அரசாங்கத்துக்கு வரி கொடுக்கச் சௌகரியம். வர்த்தகர்கள் வெளிநாட்டாரோடு வியாபாரம் செய்வதில் பண்டத்துக்குப் பண்டம் மாற்றிக்கொண்டு கஷ்டப்பட வேண்டியதில்லை. பொன் நாணயங்களைக் கொடுத்துப் பொருள்களை வாங்கலாம்; பொன் நாணயங்களைப் பெற்றுக் கொண்டு பண்டங்களை விற்கலாம். ஆகையினாலேதான் சோழ நாட்டு வர்த்தகர்கள் நம் தனாதிகாரி பழுவேட்டரையரை வாழ்த்துகிறார்கள்… இன்னும் ஒன்று சொல்கிறேன். கேள்!” என்று கூறிக் குந்தவை தேவி குரலைத் தாழ்த்திக்கொண்டு சொன்னாள்:- “சக்கரவர்த்திக்கும், சக்கரவர்த்தியின் குடும்பத்துக்கும் எதிராகச் சதி செய்பவர்களுக்கு இந்த நாணயங்களினால் அதிக சௌகரியம். எப்படிப்பட்ட உத்தமர்களையும் இந்தப் பொற்காசுகளில் மூலம் துரோகிகள் ஆக்கி விடலாம் அல்லவா?” என்றாள்.

அருகில் நின்ற தங்கசாலைத் தலைமை அதிகாரியின் காதில் குந்தவை கடைசியில் கூறிய வார்த்தைகள் இலேசாக விழுந்தன. அந்த அதிகாரி, “ஆம் தாயே! அம்மாதிரி பயங்கரமான வதந்திகள் எல்லாம் இக்காலத்தில் கேள்விப்படுகிறோம். ஆகையினாலேதான் இப்போது கொஞ்சநாளாக இந்தத் தங்க சாலைக்குக் கட்டுக்காவல் அதிகமாயிருக்கிறது. இதன் அடியில் உள்ள பாதாளச் சிறைக்கு வருவோர் போவோரும் அதிகமாகி விட்டார்கள்!” என்று சொன்னார்.

“வருகிறவர்கள் உண்டு; போகிறவர்கள் கூட உண்டா?” என்று குந்தவை கேட்டாள்.

“ஏன்? அதுவும் உண்டு. இன்று காலையில் ஒருவனைக் கொண்டு வந்தார்கள். ஒரு நாழிகைக்கு முன்னால் அவனைத் திரும்பக் கொண்டு போய்விட்டார்கள்!” என்று அந்த அதிகாரி கூறினார்.

“அது யாராயிருக்கும்?” என்று குந்தவைக்குச் சிறிது வியப்பாயிருந்தது.

தங்கசாலைக்குள் பற்பல வேலைகள் நடக்கும் இடங்களைப் பார்த்துவிட்டுப் பின்புறமாகச் சென்றார்கள். பின் சுவரில் ஒரு சிறிய வாசல் இருந்தது. அதைத் திறந்துகொண்டு சென்றார்கள். சென்ற இடத்தில் வெளிச்சம் குறைவாக இருந்தது. கூரை தாழ்வாக இருந்தது. நாலுபுறமிருந்தும் கேட்டவர்கள் ரோமம் சிலிர்க்கும் படியான உறுமல் சத்தம் கேட்டது. ஒரு சேவகன் தீவர்த்தி பிடித்துக் கொண்டு நின்றான். அதன் வெளிச்சத்தில் நாலு புறமும் உற்றுப் பார்த்தபோது பல கூண்டுகளும் அவற்றுக்குள்ளே அடைபட்ட புலிகளும் இருப்பது தெரிந்தது. அவற்றில் சில வேங்கைப் புலிகள்; சில சிறுத்தைப் புலிகள். சில படுத்திருந்தன; சில கூண்டுக்குள் முன்னும் பின்னும் உலாவிக் கொண்டிருந்தன. அவற்றின் கண்கள் அந்த இடத்தின் மங்கலான வெளிச்சத்தில் நெருப்புத் தணல்களைப் போல் ஒளிர்ந்தன.

குந்தவை வானதியின் கரத்தைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, “அடியே! பயமாயிருக்கிறதா? இங்கே மூர்ச்சை போட்டு விழுந்து வைக்காதே!” என்றாள்.

வானதி இலேசாகச் சிரித்துவிட்டு, “புலியைக் கண்டு என்ன பயம், அக்கா! புலி நம்முடைய குலத்தின் காவலன் அல்லவா?” என்றாள்.

“சில சமயம் காவலர்களே எதிரிகளுடன் சேர்த்து விடுவார்கள் அல்லவா? அப்போது அபாயம் அதிகம் ஆயிற்றே?”

“இல்லை. அக்கா! மனிதக் காவலர்கள் அப்படி ஒருவேளை துரோகம் செய்யலாம். இந்தப் புலிகள் அப்படிச் செய்யமாட்டா!”

“சொல்வதற்கில்லை இந்தப் புலிகள் எத்தனையோ இராஜாங்கத் துரோகிகளைச் சாப்பிட்டிருக்கின்றன. அவர்களுடைய இரத்தம் இந்தப் புலிகள் உடம்பில் கலந்திருக்கும் அல்லவா?”

“பயமேயில்லை” என்று சற்றுமுன் கூறிய வானதியின் உடம்பு இப்போது சிறிது நடுங்கத்தான் செய்தது.

“அக்கா! என்ன சொல்கிறீர்கள் உயிருள்ள மனிதர்களை இந்தப் புலிகளுக்கு இரையாகக் கொடுப்பார்களா, என்ன?” என்று கேட்டாள்.

“அப்படிச் செய்ய மாட்டார்கள். இந்தத் தங்கசாலைக்கு அடியில் பாதாளச் சிறை இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா? அதற்குள் போவதற்கும் வருவதற்கும் ஒரேவழிதான். அந்த வழி இந்தப் புலிமண்டபத்தில் இருக்கிறது. சிறைக் குள்ளிருந்து யாராவது தப்பித்து வரமுயன்றால் இந்த மண்டபத்துக்குள்ளேதான் வரவேண்டும். அப்போது புலிகளுக்கு இரையாவார்கள்!”

“சிவ சிவா! என்ன கொடூரம்?”

“இராஜாங்கம் என்றால் அப்படித்தான்! கருணையும் உண்டு; கொடூரமும் உண்டு. வானதி! ஒரு சமயத்தில் என்னையே இந்தப் பாதாளச் சிறையில் அடைத்தாலும் அடைத்து விடுவார்கள். சின்னப் பழுவேட்டரையர் இன்றைக்கு என்னுடன் பேசியதை நீ கேட்டிருந்தால்…”

“நன்றாயிருக்கிறது அக்கா! தங்களைப் பிடித்துச் சிறையிலடைக்கும் வல்லமையுள்ளவர்கள் ஈரேழு பதினாலு உலகத்திலும் இல்லை. அப்படி யாராவது செய்ய முயன்றால் பூமி பிளந்து இந்தத் தஞ்சை நகரத்தையே விழுங்கிவிடாதா? அதைப் பற்றி எனக்குக் கவலையில்லை. நம்முடைய பழையாறை வைத்தியர் மகனைப் பற்றித்தான் கவலைப்படுகிறேன். அந்தச் சாதுப் பிள்ளை தப்ப முயன்றிருக்க மாட்டான் அல்லவா?”

“சாதுப்பிள்ளைதான்! ஆனால் யார் எப்போது எப்படி மாறுவார்கள் என்று சொல்ல முடிவதில்லையே?”

புலிகளின் உறுமல் கோஷம் இன்னும் அதிகமாயிற்று.

காவலனைப் பார்த்து, “புலிகளுக்கு ரொம்பக் கோபம் போலிருக்கிறதே!” என்றாள் குந்தவை.

“இல்லை தாயே! சக்கரவர்த்தியின் திருக்குமாரியை இவை வாழ்த்தி வரவேற்கின்றன!” என்று காவலன் சமத்காரமாய் மறுமொழி கூறினான்.

“நல்ல வரவேற்பு!” என்றாள் குந்தவை.

“அதோடு புலிகளுக்கு இரை போடும் சமயம் நெருங்கி விட்டது. இரையை நினைத்து உறுமுகின்றன!”

“அப்படியானால் நாம் சீக்கிரம் போய்விடலாம். சிறையின் வாசல் எங்கேயிருக்கிறது?”

மண்டபத்தின் ஒரு மூலைக்கு இதற்குள் அவர்கள் வந்திருந்தார்கள். அங்கிருந்த புலிக்கூண்டு ஒன்றைக் காவலர்கள் அப்பால் நகர்த்தினார்கள். அங்கே தரையில் பதித்திருந்த கதவு ஒன்று காணப்பட்டது. இரண்டு ஆட்கள் குனிந்து கதவை வெளிப்புறமாகத் திறந்தார்கள். உள்ளே சில படிக்கட்டுகள் காணப்பட்டன. அவற்றின் வழியாக ஒவ்வொருவராக இறங்கிச் சென்றார்கள். இருள் அதிகமாயிற்று. இரு சேவகர்கள் பிடித்திருந்த இரண்டு தீவர்த்திகளிலிருந்து புகையினால் மங்கிய வெளிச்சம் வந்து கொண்டிருந்தது. குறுக்கும் நெடுக்குமாகச் சென்ற குறுகிய பாதைகளின் வழியாக அவர்கள் ஒற்றை வரிசையில் போக வேண்டியிருந்தது.

அங்கே புலிகளின் பயங்கர உறுமல் ரோமம் சிலிர்க்கச் செய்தது என்றால், இங்கே நாலுபுறத்திலும் எழுந்த தீனமான, சோகமயமான மனிதக் குரல்கள் உள்ளம் பதறி உடல் நடுங்கச் செய்தன.

ஆனால் அந்தத் தீனக்குரல்களுக்கு மத்தியில், – விந்தை! விந்தை! – ஓர் இனிய குரல் இசைத்ததும் கேட்டது!

“பொன்னார் மேனியனே! புலித்தோலை அரைக்கசைத்து

மின்னார் செஞ்சடைமேல் மிளிர்கொன்றை அணிந்தவனே!” </div>

அந்தப் பாதாளச் சிறையில் இருந்த அறைகள் ஒரு வரிசையாக இல்லை. முன்னும் பின்னும் கோணலும் மாணலுமாக இருந்தன. ஒவ்வொரு அறை வாசலிலும் சென்று காவலன் தீவர்த்தியை உயர்த்திப் பிடித்தான். சில அறைகளில் உள்ளே ஒருவனே இருந்தான். சிலவற்றில் இருவர் இருந்தார்கள். சில அறைகளில் இருந்தவர்களைச் சுவரில் அடித்திருந்த ஆணி வளையத்தில் சேர்த்துச் சங்கிலியால் கட்டியிருந்தது. சில அறைகளில் அவ்விதம் கட்டாமல் சுயேச்சையாக விடப்பட்டிருந்தார்கள். ஒவ்வொரு அறையிலும் இருந்தவர்களின் முகம் தெரிந்ததும் குந்தவைதேவி தலையை அசைக்க எல்லோரும் மேலே சென்றார்கள்.

நடுவில் ஒரு சமயம் வானதி, “இது என்ன கொடுமை? இவர்களை எதற்காக இப்படி அடைத்திருக்கிறது? நீதி விசாரணை ஒன்றும் கிடையாதா?” என்று கேட்டாள்.

அதற்குக் குந்தவை, ‘சாதாரண குற்றங்களுக்கு நீதி விசாரணை எல்லாம் உண்டு. ஆனால் இராஜாங்கத்துக்கு எதிராகச் சதி செய்தவர்கள், வெளிநாட்டு ஒற்றர்கள், ஒற்றர்களுக்கு உதவியவர்கள் இவர்களைத்தான் இங்கே போடுவார்கள். அவர்களிடமிருந்து தெரியவேண்டிய உண்மை தெரிந்து விட்டால் வெளியே விட்டுவிடுவார்கள்! ஆனால் சிலரிடமிருந்து உண்மை ஒன்றும் தெரிவதில்லை. ஏதாவது இருந்தால்தானே சொல்லுவார்கள்? அவர்கள் பாடு கஷ்டந்தான்!” என்றாள்.

இதற்குள்ளாக, “பொன்னார் மேனியனே!” பாட்டு மிகச் சமீபத்தில் கேட்கத் தொடங்கியிருந்தது. அந்த அறையில் சென்று தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது அங்கே ஒரு சிறுபிள்ளை இருப்பது தெரிந்தது. ஏற்கெனவே நமக்குத் தெரிந்த பிள்ளைதான் அவன்; சேந்தன் அமுதன்.

அவனுடைய குற்றமற்ற பால்வடியும் பச்சைப் பிள்ளை முகம் இளவரசிகளுடைய கவனத்தை கவர்ந்தது.

அவனைக் குந்தவை பார்த்து, “பாடிக் கொண்டிருந்தது நீதானா!” என்று கேட்டாள்.

“ஆம், தாயே!” என்றான்.

“உற்சாகமாயிருக்கிறாய் போலிருக்கிறது!”

“உற்சாகத்துக்கு என்ன குறைவு, அம்மா! எங்கும் நிறைந்த இறைவன் இங்கேயும் என்னுடன் இருக்கிறார்!”

“பெரிய ஞானி போலப் பேசுகிறாயே? நீ யார் அப்பா? வெளியில் என்ன செய்து கொண்டிருந்தாய்?”

“நான் பெரிய ஞானியுமில்லை; சின்ன ஞானியுமில்லை. அம்மா! வெளியில் இருக்கும் போது பூமாலை புனைந்து இறைவனுக்குச் சமர்ப்பித்துக் கொண்டிருந்தேன். இங்கே பாமாலை புனைந்து மனத்திருப்தியடைகிறேன்!”

“நீ ஞானி மட்டுமல்ல; புலவன் என்றும் தெரிகிறது. இந்த ஒரு பாடல்தான் உனக்குத் தெரியுமா? இன்னும் பலவும் தெரியுமா?”

“இன்னும் சில பாடல்களும் வரும், ஆனால் இங்கு வந்தது முதல் இதையே பாடிக்கொண்டிருக்கிறேன்.”

“ஏன்?”

“இங்கு வரும்போது தங்கசாலையின் வழியாக வந்தேன். இதுவரை நான் பாத்திராத பத்தரை மாற்றுப் பசும்பொன் திரளைப் பார்த்தேன். அது ‘பொன்னார் மேனியன்’ திருஉருவத்தை எனக்கு நினைவூட்டியது…”

“அதிர்ஷ்டசாலி நீ! பொன்னைப் பார்த்தால் பலருக்குப் பலவித ஆசைகள் உண்டாகின்றன. உனக்கு இறைவனின் திருமேனியின் பேரில்நினைவு சென்றது. உனக்கு உற்றார் உறவினர் யாரும் இல்லையா, அப்பா?”

“தாயார் மட்டும் இருக்கிறாள். தஞ்சைக் கோட்டைக்கு வெளியில் தாமரைக் குளத்தருகில் இருக்கிறாள்.”

“அந்த அம்மாள் பெயர்?”

“வாணி அம்மை.”

“நான் அந்த அம்மாளைப் பார்த்து நீ இங்கே உற்சாகமாயிருக்கிறாய் என்று சொல்கிறேன்.” “பயனில்லை, அம்மா! என் தாய்க்குக் காதும் கேளாது; பேசவும் முடியாது…”

“ஓகோ! உன் பெயர் சேந்தன் அமுதனா?” என்று இளைய பிராட்டி வியப்புடன் கேட்டாள்.

“ஆம், அம்மா! இந்த ஏழையின் பெயர் தங்களுக்குத் தெரிந்திருக்கிறதே?”

“என்ன குற்றத்துக்காக உன்னை இங்கே கொண்டு வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள்?”

“நேற்றுவரை நான் செய்த குற்றம் இன்னதென்று எனக்கும் தெரியாமலிருந்தது. இன்றைக்குத்தான் தெரிந்தது.”

“என்னவென்று தெரிந்தது?”

“ஒற்றன் ஒருவனுக்கு உதவி செய்த குற்றத்துக்காக என்னைப் பிடித்து வந்து சிறைப்படுத்தியிருக்கிறார்கள் என்று தெரிந்தது.”

“அது என்ன? எந்த ஒற்றனுக்கு நீ உதவி செய்தாய்?”

“தஞ்சைக்கோட்டை வாசலில் ஒருநாள் வெளியிலிருந்து வந்த பிரயாணி ஒருவனைச் சந்தித்தேன். அவன் இரவில் தங்க இடம் வேண்டும் என்று சொன்னான். என் வீட்டுக்கு அழைத்துப் போனேன். ஆனால் அவன் ஒற்றன் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை…”

“அவன் பெயர் என்னவென்று தெரியுமா?”

“தன் பெயர் வல்லவரையன் வந்தியத்தேவன் என்று அவன் சொன்னான். பழைய வாணர் குலத்தைச் சேர்ந்தவன் என்றும் கூறினான்…”

குந்தவையும் வானதியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். இருவருடைய உள்ளங்களும் ஒத்துப் பேசிக் கொண்டன.

வானதி, சேந்தன் அமுதனைப் பார்த்து, “எல்லாம் விவரமாகச் சொல், அப்பா!” என்றாள்.

சேந்தன் அமுதன் அவ்விதமே கூறினான். வந்தியத்தேவனைக் கோட்டைவாசலில் தான் சந்தித்ததிலிருந்து, பழுவூர் ஆட்கள் தன்னை ஆற்றங்கரையில் பார்த்துப் பிடித்துக் கொண்டது வரையில் சொன்னான்.

“யாரோ முன்பின் தெரியா ஒரு வழிப்போக்கனை நம்பி நீ எதற்காக அவ்வளவு தூரம் உதவி செய்தாய்?” என்று வானதி கேட்டாள்.

“தாயே! சிலரைப் பார்த்தால் உடனே நமக்குப் பிடித்துப் போகிறது. அவர்களுக்காக உயிரையும் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது. காரணம் என்னவென்று சொல்வது? இன்னும் சிலரைப் பார்த்தால் அவர்களைக் கொன்றுவிடலாம் என்று தோன்றுகிறது. இன்றைக்கு ஒரு மனிதனை என்னோடு கொஞ்சநேரம் அடைத்து வைத்திருந்தார்கள். அவன் பேரில் எனக்கு வந்த கோபத்துக்கு அளவில்லை. நல்ல வேளையாக சற்று நேரத்துக்கு முன்பு பழுவூர் இளைய ராணியின் ஆட்கள் வந்து அவனை விடுதலை செய்துகொண்டு போனார்கள்…!”

“அதுவும் அப்படியா?” என்று குந்தவை பற்களினால் தன் செவ்விதழ்களைக் கடித்துக் கொண்டாள். அவளுடைய புருவங்கள் நெரிந்தன. ஆத்திரப் பெருமூச்சு வந்தது.

“அவ்வளவு அவசரமாக விடுதலையான மனிதன் யார்? உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.

“தெரியாமல் என்ன? யாரோ பழையாறை வைத்தியன் மகனாம்!”

“அப்படி என்ன அப்பா, அவன் தகாத வார்த்தைகளைச் சொன்னான்? அவனைக் கொன்றுவிடலாமா என்று அவ்வளவு கோபம் உனக்கு வந்ததாகச் சொன்னாயே?”

“கோடிக்கரையில் என் மாமன் மகள் பூங்குழலி இருக்கிறாள். அவளைப் பற்றி இவன் தகாத வார்த்தைகளைச் சொன்னான். அதனாலேதான் அவன் பேரில் எனக்கு அவ்வளவு கோபம் வந்தது. ஆனாலும் அவன் ஒரு நல்ல சமாசாரம் சொன்ன படியால் போனால் போகிறதென்று விட்டுவிட்டேன்.”

“அது என்ன அவ்வளவு நல்ல சமாசாரம், அப்பா?”

“என்னுடைய நண்பன் வந்தியத்தேவனுடனேதான் இவன் கோடிக்கரைக்குப் போனான். அங்கே இந்தச் சண்டாளன் என் சிநேகிதனுக்குத் துரோகம் செய்து பழுவூர் ஆட்களிடம் பிடித்துக் கொடுத்துவிடப் பார்த்தான். அது முடியவில்லை…”

“முடியவில்லையா? அப்படியானால் அந்த ஒற்றன் தப்பித்துக் கொண்டு விட்டானா?” என்று வானதியும் குந்தவையும் ஒரே குரலில் ஆர்வத்துடன் கேட்டார்கள். இதைத் தெரிந்து கொள்ளத்தானே அவர்கள் இந்தப் பாதாளச் சிறைக்குள்ளே வந்தது!

“ஆம், அம்மணி! என் நண்பன் தப்பித்துக்கொண்டு போய்விட்டான். பூங்குழலி அவனை இரவில் படகில் ஏற்றிக்கொண்டு கடலில் இலங்கைத் தீவுக்குச் சென்றுவிட்டாளாம். தேடிப் போனவர்கள் ஏமாந்தார்கள். இந்தப் பாதகனும் ஏமாந்தான்!”

பெண்மணிகள் இருவரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டார்கள். அவர்களுடைய உள்ளத்தில் ததும்பிய மகிழ்ச்சியை அவர்களுடைய முக மலர்கள் வெளியிட்டன.

குந்தவை சேந்தன் அமுதனைப்பார்த்து, “அப்பனே! ஒற்றன் ஒருவன் தப்பித்துக் கொண்டது பற்றி நீ இவ்வளவு சந்தோஷப்படுகிறாயே? உன்னைச் சிறையில் வைத்திருப்பது சரிதான்!” என்றாள்.

“தாயே! அந்தக் குற்றத்துக்காக என்னைச் சிறையில் போடுவது சரியானால், உங்கள் இருவரையும்கூட எனக்குப் பக்கத்து அறையில் போட வேண்டுமே!” என்றான்.

பெண்மணிகள் இருவரும் நகைத்தார்கள். இருளடைந்த அந்தப் பாதாளச் சிறையில், சேந்தன் அமுதனுடைய பாட்டு எவ்வளவு விசித்திரமாயிருந்ததோ, அப்படி அவர்களுடைய சிரிப்பும் அபூர்வமாக ஒலித்தது.

“நீ வெகு கெட்டிக்காரன்; மிகப் பொல்லாதவன். உன்னை இங்கே வைத்திருத்தால் நீ பாட்டுப் பாடியே இங்கேயுள்ள மற்றவர்களையும் கெடுத்துவிடுவாய். கோட்டைத் தலைவரிடம் சொல்லி உன்னை விடுதலை செய்யப் பண்ணிவிட்டு மறுகாரியம் பார்க்க வேண்டும்” என்றாள் குந்தவை.

“தாயே! அப்படிச் செய்ய வேண்டாம்! அடுத்த அறையில் ஒரு மனிதன் இருக்கிறான். அவன் என்னிடம் தினம் நூறு தடவை ‘நீ எனக்கு ஒரு பாட்டுச் சொல்லிக் கொடு! சொல்லிக் கொடுத்தால் பாண்டிய குலத்து மணிமகுடத்தையும், மாலையையும் இலங்கையில் எங்கே ஒளித்து வைத்திருக்கிறேன், என்று தெரிவிக்கிறேன்’ என்பதாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அந்த இரகசியத்தை நான் தெரிந்து கொள்ளும் வரையில் இங்கேயே விட்டு வைக்கச் சொல்லுங்கள்!” என்றான் சேந்தன் அமுதன்.

“பாவம்! அந்த மாதிரி உனக்கும் பைத்தியம் பிடிக்கும் வரையில் இங்கேயே இருப்பேன் என்கிறாயா? அப்புறம் உன் தாயார் வாணியம்மையின் கதி என்ன?” என்று கூறிவிட்டு இளைய பிராட்டி அங்கிருந்து புறப்பட, மற்றவர்களும் சென்றார்கள்.

அரை நாழிகை நேரத்துக்கெல்லாம் சில சேவகர்கள் வந்து சேந்தன் அமுதனைப் பாதாளச் சிறையிலிருந்து விடுதலை செய்து தஞ்சைக் கோட்டை வாசலில் கொண்டுபோய் விட்டார்கள்.

results matching ""

    No results matching ""