அத்தியாயம் 34 - தீவர்த்தி அணைந்தது!

அமாவாசை முன்னிரவு, நன்றாக இருள் சூழ்ந்து விட்டது. வடதிசையில் தோன்றி மேலே வந்து கரிய மேகங்கள் இப்போது வானவெளி முழுதும் பரவி மறைத்து விட்டன. ஆகாசத்தில் ஒரு நட்சத்திரம் கூடக் கண் சிமிட்டவில்லை. மரங்களின் மீதும் புதர்களின் மீதும் பறந்த மின்மினிப் பூச்சிகள் சிறிது வெளிச்சம் அளித்தன. அதன் உதவிகொண்டு வந்தியத்தேவன் குதிரையைச் செலுத்திக் கொண்டு போனான். எங்கே போகிறோம், எதற்காகப் போகிறோம், போவதனால் பயன் ஏதேனும் ஏற்படுமா என்பதும் ஒன்றும் தெளிவாகவில்லை. குந்தவைப் பிராட்டியின் அருமைத் தோழிக்கு ஆபத்து வந்திருக்கிறது. அவளைக் காப்பாற்ற முயலுவது தன் கடமை. அப்புறம் கடவுள் இருக்கிறார்!

ஒரு நாழிகை நேரம் குதிரை ஓடிய பிறகும் பல்லக்கைக் கண்டுபிடிக்க முடியவில்லை. வெறும் பைத்தியக்கார வேலையில் இறங்கி விட்டோ மோ என்ற யோசனை வந்தியத்தேவன் மனதில் உதித்தது, குதிரையை நிறுத்தினான். அச்சமயம் சற்றுத் தூரத்தில் ஏதோ சத்தம் கேட்டது. கூர்ந்து கவனித்தான்! குதிரைக் காலடிச் சத்தம் போலிருந்தது. ஆம், குதிரைதான்! ஒரு குதிரையா, பல குதிரைகளா என்று தெரியவில்லை. பல்லக்கைக் காவல் புரிந்து கொண்டு போகும் குதிரை வீரர்களாயிருக்கலாம். இனி ஜாக்கிரதையாகப் போக வேண்டும். திடீரென்று பெருங்கூட்டத்தின் நடுவில் அகப்பட்டுக் கொள்ளக் கூடாது. அதனால் வானதி தேவிக்கும் பயன் இல்லை; தன் காரியமும் கெட்டுப் போகும்….

மெள்ள மெள்ள நின்று நின்று, குதிரையை விட்டுக் கொண்டு போனான். முன்னால் போவது ஒரே குதிரைதான் என்று ஒருவாறு நிச்சயித்துக் கொண்டான். சற்று நேரத்துக்கெல்லாம் அந்தக் குதிரை ஒரு மேட்டுப் பாங்கான கரையின் மீது ஏறுவது போலத் தோன்றியது. தான் பின் தொடர்வது தெரியாமல் மறைந்து நிற்க விரும்பினான் சுற்றும் முற்றும் கூர்ந்து பார்த்தான். பாழடைந்த மண்டபம் ஒன்று இடிந்த சவர்களுடன் பக்கத்தில் காணப்பட்டது. அதன் அருகே சென்று மொட்டைச் சுவர் ஒன்றின் மறைவில் குதிரையை நிறுத்திக் கொண்டான். முன்னால் சென்று மேட்டில் ஏறிய குதிரையைக் கண்கள் வலிக்கும் படியாக இருட்டில் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான்.

“யார் அங்கே?” என்ற குரல் வந்தியத்தேவனைத் திடுக்கிடச் செய்தது.

அது அவனுக்குப் பழக்கப்பட்ட மனிதரின் குரலாகத் தோன்றியது.

“மகாராஜா! அடிமை, நான்தான்!” என்ற மறுகுரலும் கேட்டது.

ஒரு நிமிட நேரத்துக்கெல்லாம் குரல்கள் கேட்ட இடத்தில் ஒரு தீவர்த்தி வெளிச்சம் தோன்றியது. மரத்தின் மறைவிலிருந்து கையில் தீவர்த்தியுடன் ஒருவன் வெளி வந்தான். அதன் வெளிச்சத்தில் குதிரை தெரிந்தது. குதிரையின் மேல் ஓர் ஆள் வீற்றிருப்பது தெரிந்தது. குதிரை மேலிருந்தவர் மதுராந்தகர் தான் என்பது உறுதியாயிற்று.

தரையில் நின்றவன் தீவர்த்தியைத் தூக்கிப் பிடித்தபோது இளவரசர் ஏறியிருந்த குதிரை மிரண்டது. முன்னங்கால்களை அதுமேலே தூக்கி ஒரு தடவை சுழன்றது. பின்னர் சடால் என்று பாய்ந்து ஓடத் தொடங்கியது.

அந்தக் குதிரை நின்ற இடம் ஒரு அகன்ற வாய்க்காலின் கரை. அந்த மேட்டுக்கரையிலிருந்து குதிரை வாய்க்காலின் வெள்ளத்தில் பாய்ந்தது. தீவர்த்தி பிடித்த மனிதன் “மகாராஜா! மகாராஜா!” என்று கூறிக்கொண்டே குதிரையைப் பின் தொடர்ந்து வாய்க்காலில் குதித்தான். குதித்தவன் இடறி விழுந்தான். தீவர்த்தி வாய்க்காலின் வெள்ளத்தில் அமிழ்ந்தது.

மறுகணம் முன்னைவிடப் பன் மடங்கு கனாந்தகாரம் சூழ்ந்தது. அதேசமயத்தில் இலேசாகத் தூற்றல் போடத் தொடங்கியது. காற்றினால் மரங்கள் ஆடிய சத்தத்துக்கும், மழைத் தூறலின் சத்தத்துக்கும், மண்டூகளின் வறட்டுக் கத்தல்களுக்கும் இடையே மனிதர்களின் அபயக் குரல்களும், குதிரைகளின் காலடிச் சத்தமும் குழப்பமாகக் கேட்டன. இளவரசர் மதுராந்தகர் அவ்வளவாகத் தைரியத்துக்குப் பெயர் போன மனிதர் அல்ல என்பதை வந்தியத்தேவன் அறிந்திருந்தான்.

மிரண்ட குதிரையின் மேலிருந்த மதுராந்தகருக்கு என்ன ஆபத்து விளையுமோ என்று அவன் உள்ளம் திடுக்கிட்டது. குதிரை அவரைச் சுமந்துகொண்டே தெறிகெட்டு ஓடினாலும் ஓடலாம். அல்லது அவரை வாய்க்கால் வெள்ளத்திலேயே தள்ளியிருந்தாலும் தள்ளியிருக்கலாம் அல்லது சற்றுத் தூரம் அவரைச் சுமந்து கொண்டு சென்று, வேறு எங்காவது தள்ளிவிட்டுப் போயிருக்கவும் கூடும்.

தீவர்த்தியுடன் வந்த மனிதனால் குதிரையைத் தொடர்ந்து போய் அவரைக் காப்பாற்ற முடியுமா? அவனேதான் வாய்க்கால் வெள்ளத்தில் தடுமாறி விழுந்து விட்டானே? அச்சமயம் தான் செய்ய வேண்டியது என்ன? வானதியைத் தேடிப் போவதா? மதுராந்தகரின் உதவிக்குச் செல்லுவதா என்ற போராட்டம் ஒரு நிமிடம் அவன் உள்ளத்தில் நிகழ்ந்தது.

வானதி தேவி போன இடமே தெரியவில்லை. ஆனால் மதுராந்தகர் தன் கண் முன்னால் ஆபத்துக்கு உள்ளானார். அவருக்கு உதவி செய்வது எளிது; அவரைத் தேடிப் பிடித்து அபாயம் ஒன்றுமில்லை என்று கண்டார். பிறகு வானதியைத் தேடிப் போவது இருக்கவே இருக்கிறது! கடவுளே! சம்பந்தமில்லாத வேறு எந்தக் காரியத்திலும் தலையிடுவதில்லை என்று தான் சற்று முன்னால் தீர்மானித்துக் கொண்டு கிளம்பியது என்ன? இப்போது நடப்பது என்ன?

மண்டபச் சுவரின் மறைவிலிருந்து குதிரையை வெளியில் கொண்டு வந்தான் வந்தியத்தேவன். இருட்டிலும் தூறலிலும் உள்ளுணர்ச்சியினால் வழி கண்டுபிடித்து வாய்க்காலில் இளவரசரின் குதிரை இறங்கிய இடத்தை நோக்கிச் சென்றான். வாய்க்காலில் அவனும் இறங்கினான் சுற்றும் முற்றும் நன்றாகப் பார்த்தான், ஒன்றும் தென்படவில்லை. எங்கேயோ தூரத்தில், “ஆஆஆ!” “ஓஓஓ!” “ஈஈஈ!” “டடபடா டடபடா” “கடகட கடகடா!” என்பவை போன்ற விவரம் தெரியாத சத்தங்கள் கேட்டன.

வாய்க்காலின் அக்கரையில் ஏறினான். கரை மேட்டுக்கு அப்பால் உற்றுப் பார்த்தான். நெடுகிலும் நெல் வயல்களாகக் காணப்பட்டன. வயல்களில் சேற்றிலும் பச்சைப் பயிரிலும் குதிரையை நடத்திச் செல்வது இயலாத காரியம். கரையோடு போய்த்தான் தேடிப் பார்க்க வேண்டும்.

வாய்க்காலின் கரையிலோ, செடி கொடிகளும் முட்புதர்களும் அடர்ந்திருந்தன. அவற்றின் நடுவே சென்ற குறுகிய ஒற்றையடிப் பாதை வழியாகக் குதிரையைச் செலுத்திக் கொண்டு சென்றான். மேலே மழை; கீழே சறுக்கும் சேற்றுத் தரை; ஒரு பக்கத்தில் வாய்க்கால்; இன்னொரு பக்கத்தில் நெல் வயல்கள்; சுற்றிலும் முட்புதர்கள். குதிரை மெள்ளச் மெள்ளச் சென்றது. நேரமோ, ஒரு நிமிஷம் ஒரு யுகமாகச் சென்றது! தூறல் மழையாக வலுத்துக் கொண்டிருந்தது! இருட்டு மேலும் இருண்டு கொண்டிருந்தது! வந்தியத்தேவனுடைய உள்ளம் சிந்தனையில் ஆழ்ந்தது!

மதுராந்தகத் தேவர் தனியாகக் குதிரைமீது ஏன் வந்தார்? எங்கே செல்வதற்காகப் புறப்பட்டு வந்தார்? அவரை எதிர்கொண்டு வந்த மனிதன் யார்? வானதியைச் சிலர் பிடித்துக் கொண்டு சென்றதற்கும் இதற்கும் ஏதேனும் சம்பந்தம் உண்டா? வானதியின் கதி இப்போது என்ன ஆகியிருக்கும்? நாம் எதற்காக இந்தச் சங்கடத்தில் அகப்பட்டுக் கொண்டு விழிக்க வேண்டும்? நம்முடைய காரியத்தை நாம் பார்க்கலாமே? இராஜபாட்டையைத் தேடிப் பிடித்து அடைந்து, காஞ்சியை நோக்கிப் போகலாமே! அதுதான் இந்த மழைக்கால இருட்டில் எப்படிச் சாத்தியமாகும்? இந்தக் காரியங்கள் எல்லாம் நமக்குச் சம்பந்தம் இல்லையென்று எப்படித் தீர்மானிக்க முடியும்?

கடம்பூர் சம்புவரையர் அரண்மனையில் நமக்குச் சம்பந்தமில்லாத காரியத்தைக் கவனித்ததினால் பிற்பாடு எவ்வளவு உபயோகம் ஏற்பட்டது? ஆனாலும் இன்றிரவு இந்த இருட்டில் இந்த வாய்க்காலின் கரையோடு போய்க்கொண்டிருப்பதினால் ஒரு – பயனும் ஏற்படப்போவதில்லை. சொட்ட நனைவது தான் பயன்! குதிரை எங்கேயாவது இடறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டால், பிரயாணமே தடைப்பட்டுவிடும்.

திரும்பிச் சென்று அந்தப் பாழும் மண்டபத்தை அடைய வேண்டியதுதான். மழைவிட்ட பிறகுதான் மறுபடியும் புறப்பட வேண்டும். பளிச்சென்று ஒரு மின்னல், அதன் நேர் வெளிச்சத்தில், சிறிது தூரத்தில், களத்துமேடு ஒன்றில், ஒரு குதிரை நின்றது போலத் தெரிந்தது. வந்ததுதான் வந்தோம்; இன்னும் கொஞ்சதூரம் சென்று, அதையும் பார்த்துவிட்டுத்தான் போகலாமே! இளவரசர் மதுராந்தகருக்கு ஆபத்துச் சமயத்தில் கை கொடுத்து உதவினால், அதன் மூலம் பிற்பாடு எவ்வளவோ காரியங்களுக்குச் சாதகம் ஏற்படலாம்.

குதிரையை வாய்க்காலின் கரையிலிருந்து பக்கத்து வயல் வரப்பில் வந்தியத்தேவன் இறக்கினான். குதிரை நின்றதாகத் தோன்றிய களத்துமேட்டை நோக்கிச் செலுத்தினான். களத்துமேட்டின் சமீபத்தை அடைந்தபோது அது ஒரு பெரிய கரிய பூதத்தைப் போல் காட்சி அளித்தது. இன்னொரு மின்னல், மேட்டின்மீது குதிரை நின்றது ஒரு கணம் தெரிந்தது. குதிரையின் பேரில் ஆள் இல்லை என்பதை வந்தியத்தேவன் கவனித்துக் கொண்டான். இடி இடித்தது! இடிக்கும் மின்னலுக்கும் பயந்துதானோ என்னவோ அந்தக் குதிரை மறுபடியும் தெரிகெட்டுப் பயந்து ஓடத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து போவதில் இனி ஒரு பயனுமில்லை.

பக்கத்தில் எங்கேயாவது குதிரைமேலிருந்து விழுந்த மதுராந்தகத் தேவர் ஒரு வேளை இருக்கக்கூடும். ஆகையால் வந்தியத்தேவன் பலமுறை குரல் கொடுத்துப் பார்த்தான். “ஜிம் ஜிம்” “ரிம் ரிம்” என்னும் மழை இரைச்சலை மீறி அவனுடைய இடி முழக்கக் குரல் “அங்கே யார்?” “அங்கே யார்?” என்று எழுந்தது. நாலாபுறத்திலிருந்தும் “அங்கே யார்?” “அங்கே யார்?” என்ற எதிரொலிதான் கேட்டது.

மழை மேலும் வலுத்துக் கொண்டிருந்தது. வாடைக்காற்று விர் என்று அடித்தது. காற்றின் வேகத்தினால் மழைத் தாரைகள் பக்கவாட்டில் திரும்பித் தாக்கின. குதிரை உடம்பைச் சிலிர்த்துக் கொண்டது. வந்தியத்தேவனுடைய உடம்பும் மழையினால் தாக்கப்பட்டுக் குளிரினால் நடுங்கத் தொடங்கியது.

இனி அங்கே நிற்பதில் ஒரு பயனுமில்லை வந்தியத்தேவன் குதிரையை வந்த வழியே திரும்பினான். தன்னுடைய அறிவீனத்தை எண்ணி வருத்தப்பட்டுக் கொண்டே வந்தான். இனி மேலாவது இத்தகைய அசட்டுக் காரியங்களில் இறங்காமலிருக்க வேண்டும். நம்முடைய காரியம் உண்டு நாம் உண்டு என்று பார்த்துக்கொண்டு போக வேண்டும்…

குதிரை தன்னுடைய உள்ளுணர்ச்சியைக் கொண்டு வழி கண்டுபிடித்து இடிந்த மண்டபத்துக்கு அருகில் வந்து நின்று ஒரு கனைப்புக் கனைத்தது. அப்போதுதான் வந்தியத்தேவன் சிந்தனா உலகத்திலிருந்து இந்த உலகத்துக்கு வந்தான். குதிரை மீதிருந்து இறங்கினான். அவன் உடுத்தியிருந்த துணிகள் சொட்ட நனைந்து போயிருந்தன. அவற்றை உலர்த்தியாக வேண்டும். அன்றிரவு அந்த இடிந்த மண்டபத்தில் தானும் குதிரையும் தங்கியிருப்பதற்கு இடியாத பகுதி ஏதேனும் இருக்கிறதா என்று சுற்று முற்றும் பார்த்தான்.

வெட்ட வெளியில் கொட்டுகின்ற மழையில் காலிலே நெருப்புச் சுட்டால் எப்படியிருக்கும்? அவ்வாறு வந்தியத்தேவன் துள்ளிக் குதிக்க நேர்ந்தது. அதற்குக் காரணம் வேறொன்றுமில்லை; பேயில்லை பிசாசில்லை; ஒரு சின்னஞ் சிறு குழந்தையின் குரல்தான்!

“அம்மா! அம்மா!”

பேயில்லை, பிசாசில்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? அந்த வேளையின் அந்த மண்டபத்தில், குழந்தைக் குரல் எப்படிக் கேட்க முடியும்?

அது பேய் பிசாசின் குரல் இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? சீச்சீ! பேயும் இல்லை! பிசாசும் இல்லை! பேயும் பிசாசும் பயப்பிராந்தி கொண்ட பேதைகளின் கற்பனை!

“அம்மா! அம்மா! ஊம்! ஊம்!” இது மனிதக் குழந்தையின் குரல்தான்! தாயைப் பிரிந்த சேயின் பயங்கலந்த அழுகைக் குரல்தான்!

இடிந்த மண்டபத்தின் இருளடைந்த பகுதியிலிருந்து வருகிறது. குழந்தை மட்டுந்தான் இருக்கிறதா? வேறு யாரும் இல்லையா?

“அம்மா! அம்மா! ஊம்! ஊம்!”

குரல் வந்த இடத்துக்குச் சமீபத்தில் சென்று வந்தியத்தேவன் “யார் அங்கே”? என்றான்.

“யார் அங்கே?” என்று குழந்தையின் குரல் எதிரொலித்தது.

“நான்தான்! நீயார்? இருட்டில் என்ன செய்கிறாய்? வெளியே வா!”

“வெளியில் மழை பெய்கிறதே!”

“மழை நின்று விட்டது; வா!”

“என் அம்மா எங்கே?”

“அம்மா உனக்குப் பால்வாங்கிக் கொண்டுவரப் போயிருக்கிறாள்.”

“இல்லை; நீ பொய் சொல்கிறாய்!”

“நீ வெளியில் வருகிறாயா; நான் உள்ளே வரட்டுமா?”

“உள்ளே வந்தால் என் கையிலே கத்தியிருக்கிறது! குத்தி விடுவேன்!”

“அடே அப்பா! பெரிய வீரனாயிருக்கிறாயே? வெளியில் வந்துதான் குத்தேன்!”

“நீ யார்? புலி இல்லையே?”

“நான் புலி இல்லை; குதிரை!” என்றான் வந்தியத்தேவன்.

“நீ பொய் சொல்கிறாய்; குதிரை பேசுமா?”

“புலியாயிருந்தால் பேசுமா?”

“வெளியில் வந்தால் புலி இருக்கும். ஒருவேளை மேலே பாய்ந்துவிடும் என்று அம்மா சொன்னாள்.”

“நான் புலி இல்லை; உன் பேரில் பாயவும் மாட்டேன்; பயப்படாமல் வெளியே வா!”

“பயமா? எனக்கு என்ன பயம்?” என்று சொல்லிக் கொண்டே ஒரு சின்னஞ்சிறு குழந்தை இருண்ட மண்டபத்திலிருந்து வெளியே வந்தது. இதற்குள் மழை நன்றாக விட்டுப் போயிருந்தது. மேகங்கள் சிறிது விலகி நட்சத்திரங்களும் தெரிந்தன. நட்சத்திர வெளிச்சத்தில் அக்குழந்தையை வந்தியத்தேவன் பார்த்தான். சுமார் நாலு வயதிருக்கும். இருந்த வெளிச்சத்தைக் கொண்டு வெகு இலட்சணமான குழந்தை என்று தெரிந்து கொண்டான். இடுப்பில் ஒரு சிறிய பட்டுத் துணி உடுத்தியிருந்தது. கழுத்தில் ஒரு ரத்தினமாலை அணிந்திருந்தது.

பெரிய குலத்துக்குக் குழந்தையாக இருக்க வேண்டும். இதை இங்கே தனியாக விட்டுவிட்டுப் போன தாய் யார்? இங்கே எதற்காக வந்தாள்? ஏன் குழந்தையை விட்டுவிட்டுப் போனாள்?

இதற்குள் குழந்தையும் வந்தியத்தேவனை உற்றுப் பார்த்து விட்டு, “நீ குதிரை இல்லை, மனிதனைப் போல்தான் இருக்கிறாய்” என்றது.

“அதோ குதிரையும் இருக்கிறது, பார்!” என்றான் வந்தியத்தேவன்.

குழந்தை குதிரையைப் பார்த்தது.

“ஓகோ! எனக்காகத்தான் கொண்டு வந்திருக்கிறாயா? பல்லக்கு வரும் என்றல்லவா சொன்னார்கள்?”

சிறுவனின் மறுமொழி வந்தியத்தேவனுடைய மனத்தில் பற்பல முரண்பட்ட எண்ணங்களை உண்டாக்கின. இந்தக் குழந்தை யார்? இவன் ஏன் இங்கே தனியாயிருக்கிறான்? இவ்வளவு சின்னஞ் சிறு பிள்ளை இப்படிச் சற்றும் பயப்படாமல் இருக்கிறானே, அது ஆச்சரியமல்லவா? இவனுக்காக யார் பல்லக்கு அனுப்புவதாகச் சொல்லியிருந்தார்கள்? அது ஏன் வரவில்லை? இவனை விட்டு விட்டுப் போன இவன் அம்மா யார்? அவள் எங்கே போயிருக்கிறாள்?

“குழந்தை! உன்னை ஏன் உன் அம்மா விட்டுவிட்டுப் போய் விட்டாள்?” என்று கேட்டான்.

“அம்மா என்னை விட்டு விட்டுப் போகவில்லை; நான்தான் அவளை விட்டுவிட்டு வந்துவிட்டேன்!” என்றான் அந்தச் சிறுவன்.

“ஏன் விட்டுவிட்டு வந்தாய்?”

“குதிரை ஒன்று ஓடி வந்தது. அதைப் பிடித்து அதன் மேல் ஏறிக்கொண்டு வரலாம் என்று நான் சொன்னேன் அம்மா கூடாது என்றாள். நான் அவளுக்குத் தெரியாமல் குதிரையைப் பிடிக்க ஓடி வந்தேன் அந்தக் குதிரை தானா இது?”

“இல்லை; இது வேறு குதிரை. அப்புறம், எப்படி இங்கே வந்தாய்?”

“குதிரை அகப்படவில்லை. அம்மாவையும் காணவில்லை. மழை அதிகமாக வந்தது. அதற்காக இந்த மண்டபத்துக்குள் வந்தேன்.”

“இருட்டில் தனியாக இருக்க உனக்குப் பயமாயில்லையா?”

“பயம் என்ன? தினம் இந்த மாதிரிதானே இருக்கிறேன்!”

“புலிக்குக் கூடப் பயமில்லையா?”

“அம்மாவுக்குத்தான் பயம், எனக்குப் பயம் இல்லை. நான் மீன், புலியை விழுங்கி விடுவேன்!”

“அடே! மீன் புலியை விழுங்குமா?”

“நான் சாதாரண சின்ன மீன் இல்லை! பெரிய மகர மீன்; திமிங்கலம்! புலி, சிங்கம் யானை எல்லாவற்றையும் விழுங்கி விடுவேன்…”

வந்தியத்தேவன் மனத்தில் என்னவெல்லாமோ எண்ணங்கள் தோன்ற ஆரம்பித்தன. புலியை விழுங்கும் மீன் அதிசய மீன் அல்லவா! இப்படி யார் இந்தப் பிள்ளைக்குச் சொல்லிக் கொடுத்திருப்பார்கள்?

“அதோ அங்கே என்ன சத்தம்?” என்று கேட்டான் சிறுவன்.

வந்தியத்தேவன் பார்த்தான், தூரத்தில் ஒரு கூட்டம் வந்து கொண்டிருந்தது. கூட்டதில் சிலர் தீவர்த்திப் பந்தங்களை வைத்துக் கொண்டிருந்தார்கள். அவர்களுக்கு நடுவில் ஒரு பல்லக்கும் தெரிந்தது. எல்லாரும் பரபரப்புடன் ஓடி வந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு பெண் பிள்ளையும் இருந்ததாகத் தோன்றியது. “அங்கே!” “இங்கே” “அதோ!” “இதோ!” என்ற கலவரமான குரல்கள் கேட்டன.

இடிந்த மண்டபத்தைக் கூட்டத்தில் ஒருவன் பார்த்துச் சுட்டிக் காட்டினான். அவ்வளவுதான்! எல்லோரும் அம்மண்டபத்தை நோக்கி ஓட்டம் பிடித்து ஓடி வந்தார்கள்.

“அதோ வருகிறார்கள், பல்லக்கும் வருகிறது. எனக்குப் பல்லக்கில் ஏறப் பிடிக்கவில்லை. என்னை உன் குதிரையின் மேல் ஏற்றிக் கொண்டு போகிறாயா?” என்று சிறுவன் கேட்டான்.

அந்தக் குழந்தையின் முகமும், தோற்றமும், பேச்சுக்களும் வந்தியத்தேவனுடைய மனத்தைக் கவர்ந்தன. அவனைக் கட்டி அணைத்துத் தூக்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது. ஆனால் மனத்திற்குள் ஏதோ ஒரு தடங்கலும் கூடவே ஏற்பட்டது.

“எனக்கு வேறு அவசர வேலை இருக்கிறதே?” என்றான் வந்தியத்தேவன்.

“நீ எங்கே போகப் போகிறாய்?”

“காஞ்சிக்கு!”

“காஞ்சிக்கா! அங்கேதான் என்னுடைய முக்கியமான சத்துரு இருக்கிறான்!”

வந்தியத்தேவனுக்குத் தூக்கி வாரிப்போட்டது. அவ்விதம் அந்தப் பிள்ளையின் அருகில் தான் நிற்பது கூடப் பிசகு என்று எண்ணினான். ஆனால் குதிரையின் மேல் ஏறிப் போவதற்கும் அவகாசம் இல்லை. கூட்டம் வெகு அருகில் வந்து விட்டது. ஓடினால் சந்தேகத்துக்கு இடமாகும். இவ்வளவுடன் என்னதான் நடக்கப் போகிறது என்று தெரிந்து கொள்ளும் ஆவலும் வந்தியத்தேவனைப் பற்றியிருந்தது. ஆகையால் சற்று ஒதுங்கிச் சென்று இடிந்த சுவர் ஓரமாக இருட்டில் நின்றான்.

“இதோ நான் இருக்கிறேன்” என்று முன்னால் போய் நின்றான் சிறுவன். வந்தவர்களிலெல்லாம் முதலில் வந்தவள் ஒரு பெண்பிள்ளை. அவளுக்கு ஓடிவந்ததினால் இறைத்துக் கொண்டிருந்தது. அதை அவள் பொருட்படுத்தாமல் தாவி வந்து குழந்தையை எடுத்து வாரி அணைத்துக் கொண்டு, “பாண்டியா இப்படிச் செய்து விட்டாயா?” என்றாள்.

அவளுக்கு அடுத்தபடியே வந்தவன் ரவிதாஸன். அவன் சிறுவனின் பக்கத்தில் வந்து நின்று, “சக்கரவர்த்தி! இப்படி எங்களைப் பயமுறுத்தி விட்டீர்களே?” என்றான்.

சிறுவன் சிரித்தான், “அப்படித்தான் பயமுறுத்துவேன். நான் குதிரை வேண்டும் என்று கேட்டேன். பல்லக்கு கொண்டு வந்திருக்கிறீர்களே!” என்றான்.

நாம் முன்னம் பார்த்திருக்கும் சோமன் சாம்பவன், இடும்பன்காரி, தேவராளன் முதலியவர்கள் சிறுவனை வந்து சூழ்ந்து கொண்டார்கள். “சக்கரவர்த்தி! ஒரு குதிரை என்ன? ஆயிரம் குதிரை, பதினாயிரம் குதிரை கொண்டு வருகிறோம், இன்றைக்கு இப்பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்!” என்றான் சோமன் சாம்பவன்.

“மாட்டேன்; நான் அந்தக் குதிரை மேலேதான் ஏறி வருவேன்” என்று சிறுவன் கூறிச் சுவர் மறைவில் நின்ற குதிரையைச் சுட்டிக் காட்டினான்.

அப்போதுதான் குதிரையையும், அதன் அருகில் நின்ற வந்தியத்தேவனையும் அவர்கள் கவனித்தார்கள்.

ரவிதாஸன் முகத்தில் வியப்பும் திகிலும் குரோதமும் கொழுந்து விட்டு எரிந்தன. இரண்டு அடி முன்னால் சென்று, “அடப் பாவி! நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டான்.

“அட பிசாசே! கோடிக்கரையிலிருந்து நீ எப்படி இங்கே வந்தாய்?” என்று கேட்டான் வந்தியத்தேவன்.

ரவிதாஸன் ‘ஹா ஹா ஹா’ என்று சிரித்தான். “நீ என்னை உண்மையாகவே பிசாசு என்று நினைத்துக் கொண்டாயா?” என்று கேட்டான்.

“சிலர் செத்துப்போன பிறகு பிசாசு ஆவார்கள். நீ உயிரோடிருக்கும் பிசாசு!” என்றான் வந்தியத்தேவன்.

இதற்குள் சிறுவன், “அவனோடு சண்டை போடாதே! அவனை எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இருட்டில் எனக்குத் துணையாயிருந்தான். புலி வந்தால் கொன்று விடுவதாகச் சொன்னான். அவனும் நம்மோடு வரட்டும்” என்றான்.

ரவிதாஸன் சிறுவன் அருகில் சென்று, “சக்கரவர்த்தி! அவசியம் அவனையும் அழைத்துப் போகலாம். தாங்கள் இன்றைக்கு ஒரு நாள் பல்லக்கில் ஏறிக் கொள்ளுங்கள்!” என்றான்.

சிறுவன் அவ்வாறே பல்லக்கை நோக்கிச் சென்றான்.

ரவிதாஸன் வந்தியத்தேவனை மறுபடியும் நெருங்கி, “இப்போது என்ன செய்யப் போகிறாய்?” என்று கேட்டான்.

“நீயல்லவா சொல்ல வேண்டும்?”

“எங்களுடன் வந்து விடு! எங்களுடைய இரகசியம் உனக்கு முன்னமே அதிகம் தெரியும். இப்போது இன்னும் அதிகமாகத் தெரியும். உன்னை விட்டுவிட்டு நாங்கள் போக முடியாது. வந்துவிடு!”

“உங்களுடன் நான் வர மறுத்தால்?…”

“முடியாத காரியம், நீ பெரிய சூரன் என்பதை அறிவேன். ஆயினும் நாங்கள் இருபது பேர் இருக்கிறோம் எங்களிடமிருந்து தப்பி நீ போக முடியாது.”

“உயிரோடு தப்ப முடியாது என்று தானே சொல்கிறாய்?”

“நீ இளம் பிராயத்தவன். உலகத்தின் சுகங்கள் ஒன்றையும் அநுபவியாதவன். எதற்காக வீணுக்கு உயிரை விட வேண்டும்?”

“வீணுக்கு யார்தான் உயிரைவிடுவார்கள்? உங்களுடன் வரச் சொல்லுகிறாயே, எங்கே கூப்பிடுகிறாய்? நீங்கள் எங்கே போகிறீர்கள்?”

“அப்படிக்கேள் சொல்லுகிறேன். பழுவூர் இளைய ராணியிடந்தான்!”

“ஓகோ! அப்படித்தான் நினைத்தேன். இளையராணி இன்று எங்கே இருக்கிறாள்?”

“இளைய ராணி இத்தனை நேரம் திருப்புறம்பயத்துக்கு வந்திருப்பாள் நீ வருவாயா, மாட்டாயா?”

“நானும் அந்தப் பக்கந்தான் போக வேண்டும். வழிகாட்ட யாருமே இல்லையே என்று பார்த்தேன். நல்ல வேளையாக நீ வந்து சேர்ந்தாய்! போகலாம், வா!” என்றான் வந்தியத்தேவன்.

இதற்குள் சிறுவன் பல்லக்கில் ஏறிக்கொண்டான், பல்லக்கு நகர்ந்தது. அதைச் சுற்றிலும் தீப்பந்தங்களைப் பிடித்துக்கொண்டு பல வித கோஷங்களை எழுப்பிக் கொண்டும் ரவிதாஸனுடைய கோஷ்டியார் சென்றார்கள். வந்தியத்தேவனும் அவர்களைத் தொடர்ந்து சென்றான். அவன் உள்ளத்தில் பல்வேறு எண்ணங்கள் அலைபாய்ந்தன.

வானதியின் கதி என்ன? தெரியவில்லை. மதுராந்தகர் என்ன ஆனார்? தெரியவில்லை. தன்னுடைய கதி இன்றிரவு என்ன ஆகப் போகிறது? அதுவும் தெரியவில்லை.

கடம்பூர் மாளிகையில் அன்று கண்டறிந்த சதிச்செயலை விடப் பன்மடங்கு சதிச் செயலைப் பற்றி இன்று நேர்முகமாக அறிந்து கொள்ளப் போகிறோம் என்பதில் சந்தேகமில்லை. அந்த வரையில் பிரயோஜனகரமானதுதான். ஆனால் அதற்குப் பிறகு என்ன நடக்கும்? தன்னை உயிரோடு தப்பிச் செல்ல இவர்கள் விடுவார்களா? இவர்களோடு சேர்ந்து விடும்படி தன்னையும் கட்டாயப் படுத்துவார்கள். மாட்டேன் என்று சொன்னால் பலியிடத்தான் பார்ப்பார்கள்! ஒரு வேளை மறுபடியும் நந்தினியின் தயவினால்… பழுவூர் இளைய ராணியின் பெயரை ரவிதாஸன் கூறியதும் அவர்களுடன் போகத்தான் இணங்கி விட்டதை வந்தியத்தேவன் நினைத்துப் பார்த்தான். அது அவனுக்கே வியப்பை அளித்தது. ‘மாயை’ என்றும் ‘மோகம்’ என்றும் பெரியோர்கள் சொல்வது இதைத்தான் போலும். ‘அவள்’ எவ்வளவு பயங்கரமான சதிச்செயல்களில் ஈடுபட்டிருக்கிறாள் என்பது அவனுக்குத் தெரிந்து தானிருந்தது. ஆயினும் அவளைச் சந்திப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது என்றால், அதைப் பயன்படுத்திக் கொள்ள அவன் மனத்தில் ஓர் ஆர்வம் எழுந்தது. அடக்க முடியாமல் தன்னை மீறி எழுந்தது. யோசித்துப் பார்ப்பதற்கு முன்னால் அவன் வாய் “வருகிறேன்” என்று பதில் சொல்லி விட்டது… ஆனால் வேறு வழிதான் என்ன? ரவிதாஸன் கூறியதுபோல் இத்தனை பேருடன் தன்னந்தனியாகச் சண்டையிடுவது சாத்தியமில்லை. சிறிது அவகாசம் கிடைத்தால், தப்பிச் செல்வதற்கு ஏதேனும் ஓர் உபாயம் தென்பட்டாலும் தென்படலாம். அத்துடன் இந்தச் சதிகாரக் கூட்டத்தைப் பற்றியும் இவர்களுடைய நோக்கங்களைப் பற்றியும் இன்னும் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

“காஞ்சிக்கா போகிறாய்? அங்கேதான் என்னுடைய முக்கிய சத்துரு இருக்கிறான்!” என்று அந்தச் சின்னஞ்சிறு குழந்தை மழலை மொழியில் கூறியது அடிக்கடி வந்தியத்தேவனுக்கு நினைவு வந்து கொண்டிருந்தது. அந்தச் சிறுவன் யார்? அவனைச் “சக்கரவர்த்தி” என்று இவர்கள் அழைப்பதேன்? “முக்கிய சத்துரு” என்று அச்சிறுவன் யாரைக் குறிப்பிட்டான்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் அவனுடைய மனத்தில் பதில்களும் தோன்றிக் கொண்டிருந்தன. நினைக்க நினைக்க பயங்கரம் அதிகமாகிக் கொண்டிருந்தது. கடவுளே! இவற்றுக்கெல்லாம் முடிவு எப்போது? “வெகு சீக்கிரத்தில்” என்று அவனுக்குள் ஒரு குரல் சொல்லிற்று.

அந்த அதிசய ஊர்வலம் போய்க் கொண்டேயிருந்தது. வயல்கள், வாய்க்கால்கள், வரப்புகள், காடுமேடுகளைத் தாண்டி ஒரு கணமும் நிற்காமல் போய்க் கொண்டு இருந்தது. கடைசியாக வெள்ளப் பெருக்கெடுத்து ஓடிய மண்ணி நதியையும் தாண்டி அப்பால் திருப்புறம்பயம் எல்லையை அடைந்தது. பள்ளிப் பனையைச் சுற்றிலும் மண்டியிருந்த காட்டுக்குள்ளும் பிரவேசித்தது.

results matching ""

    No results matching ""